பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!
‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை நிலவ வேண்டும் என்பதில் இந்தக் கூட்டமைப்பு பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் நிகழாண்டு நவம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றுள்ளாா்.
அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா்கள் ஜெய்சங்கா், மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த கூட்டத்தின் நிறைவில் க்வாட் கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல் நடத்தியவர்கள், திட்டம் தீட்டியவர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு ஏற்ப முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிக்கையில் பாகிஸ்தான் பெயர் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
முன்னதாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.
அந்த மாநாட்டு கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் கவலைகள் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படாததால் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.
The leaders of the Quad countries have issued a joint statement condemning the Pahalgam attack.