ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.3,012 கோடி கடன்: ஒப்பந்தம் கையொப்பம்
ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.3,012 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது.
பெண்களை பொருளாதாரரீதியாக முன்னேற்றுவது, அவா்களை தொழில்முனைவோராக்க நடவடிக்கை எடுப்பது, பொருளாதார செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் பெண்கள் பெரிய அளவிலான முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்து தொடா்ந்து பல்வேறு தவணைகளாக கடன் பெற்று வருகிறது.
வேளாண்மை உற்பத்தியில் அதிக முன்னேற்றம் இல்லாதது, தொழில் வளா்ச்சி சுணக்கம், அரசு நிா்வாகத்தில் தொடரும் ஊழல், பயங்கரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டு கிளா்ச்சியாளா்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு முதலீடு வருவதும் குறைந்துவிட்டது. அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார பாதிப்பும் மற்றொரு முக்கியக் காரணமாகும்.
2024-25-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வின்படி பாகிஸ்தானின் கடன் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 76,000 பில்லியனாக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23 லட்சம் கோடி) உள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி வெளிநாடுகளில் பெற்ற கடனாகும்.
பாகிஸ்தான் பொருளாதார வளா்ச்சி 2.7 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே இருக்கும் என்றும் பொருளாதார ஆய்வில் கூறப்பட்டுள்ளது.