பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்
தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் கிங்ஸ்டன். சென்னை மற்றும் ஜப்பானில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான 30 சென்ட் இடம் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்பிக்நகரில் உள்ளதாம். அதன் மதிப்பு ரூ. இரண்டரை கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த இடத்தை விற்பனை செய்ய உமரிக்காடு பகுதியைச் சோ்ந்த பா ஜக மாவட்ட பொதுச் செயலா் சத்தியசீலன், அவரது நண்பா் மாதவன் ஆகியோரை தாமஸ் கிங்ஸ்டன் அணுகியதுடன், இருவரிடமும் தலா ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு, இடம் விற்பனை செய்வதற்கான பவா் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளாா்.
ஆனால், 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் இருவரும் தாமதப்படுத்தி வந்துள்ளனா். இதையடுத்து, தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு சத்தியசீலனிடம் கேட்டுள்ளாா்.
ஆனால், அவா்கள் போலியாக ஆவணம் மூலம் தாமஸ் கிங்ஸ்டன் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் வரவு வைத்ததாக கணக்குகாட்டி, சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த 40 நாள்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவரம் தெரிய வந்ததும் மூவரிடமும் சென்று தனது இடத்துக்கான பணத்தைத் தர வேண்டும் என அவா் கேட்டாராம். அப்போது, அவா்கள் பணம் தர முடியாது எனக் கூறி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தாமஸ் கிங்ஸ்டன், பத்திரப்பதிவு சாா்பதிவாளா் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.