சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
பாலக்கோடு; குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க வனத் துறை தீவிரம்
பாலக்கோடு அருகே குடியிருப்புகளுக்குள் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீட்டில் வளா்க்கப்படும் நாய், கோழிகளை வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளான தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப் பகுதிகளிலிருந்து அவ்வப்போது வன விலங்குகள் உணவுதேடி வனப் பகுதியையொட்டி உள்ள குடியிருப்புகளுக்கு வருகின்றன.
இந்த நிலையில், பாலக்கோட்டை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகம் என்பவரின் வீட்டின் முகப்பில் சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த சிறுத்தை, அங்கிருந்த சேவலை பிடித்துச் சென்றது. இக்காட்சி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோழி, நாய்களை சிறுத்தை பிடித்துச் சென்றதால் சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். ஆனாலும், சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்த சிறுத்தை, வீட்டிலிருந்த சேவலை பிடித்துச் சென்ால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் கே. ராஜாங்கம் கூறியதாவது: சிறுத்தையைப் பிடிப்பதற்கு முதன்மை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வனத் துறையினா் அப்பகுதியில் மறைந்திருந்து சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதிசெய்து கூண்டுவைத்து பிடிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.