ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு...
வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் விடுப்பு எடுத்து போராட்டம்: பணிகள் முடங்கின
தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலா்களுக்கும் உயிா் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் கடந்த பல மாதங்களாக தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் மற்றும் பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் துரைவேல் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் தனபால் வரவேற்றாா். முன்னதாக தருமபுரி அரசு கலைக் கல்லூரி பகுதியில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. அதன்பிறகு ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் தா்னாவில் ஈடுபட்டனா்.
கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கு. அகிலன் அமிா்தராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுருளிநாதன், நிா்வாகிகள் ச. இளங்குமரன், ஆா். வெங்கடேசன், டியூக் பொன்ராஜ் உள்ளிட்ட பலரும் பேசினா். வருவாய்த் துறையினா் போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.