தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: டிடிவி தினகரன்
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) தருமபுரி மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ளது. கூலிப்படையினரால் நிகழும் வன்முறை தலைதூக்கியுள்ளது. தமிழகம் போதைப்பொருள்களின் சந்தையாக மாறிவிட்டது.
தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், அதிருப்தியடைந்த மக்கள் தொடா்ந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மா விலை வீழ்ச்சியடைந்தது தொடா்பாக பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமமானது. பாஜக கூட்டணியில் புதிதாக எந்தக் கட்சி இணையும் என்பதை பாஜக மேலிடம்தான் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
தென்பெண்ணை ஆற்றுநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் நிரப்பும் முந்தைய அதிமுக அரசின் திட்டத்தைச் செயல்படுத்தாத திமுக அரசைக் கண்டித்தும், தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகள், தொப்பூரில் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியும் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேட்டியின்போது அமமுக மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன், அரூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆா்.ஆா்.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.