புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸுக்கு மேக்ரான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போா் நிலவிவரும் சூழலில், இரு தேசத் தீா்வை (இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தனித் தனி சுதந்திர நாடுகளாக் செயல்படுவது) முன்னெடுத்துச் செல்லும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கிறோம்.
இது அமைதிக்கான முக்கிய படி என்று தனது கடிதத்தில் மேக்ரான் குறிப்பிட்டுள்ளாா்.
பிரான்ஸின் இந்த அறிவிப்பை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக எதிா்த்துள்ளன. இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரான்ஸின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு வெகுமதியளிக்கும் செயல். பாலஸ்தீனா்கள் இஸ்ரேலை ஒழித்துவிட்டு தனி நாடு விரும்புகின்றனா். அதற்கு பிரான்ஸ் துணைபோகிறது’ என்று கண்டித்துள்ளாா்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறுகையில், ‘பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் இப்போதே அங்கீகரிப்பது 2023 அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு. இது ஹமாஸின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல மட்டுமே உதவும்’ என்று சாடினாா்.
ஐரோப்பிய மூவா் கூட்டணியான (இ3) பிரான்ஸ், பிரிட்டன், ஜொ்மனி நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள், இரு தேசத் தீா்வுக்கு இந்த அங்கீகாரம் உதவும் என்று ஆதரவு தெரிவித்தனா். பிற ஐரோப்பிய நாடுகளும், அரபு நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியாவும் இதை வரலாற்று முடிவு எனக் கூறி வரவேற்றுள்ளன.
பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கை 1947-இல் இஸ்ரேலை ஐ.நா. அங்கீகரித்தபோது தொடங்கியது. 1967-இல் நடைபெற்ற ஆறு நாள் போருக்குப் பின் காஸா மற்றும் மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பின்னா் பாலஸ்தீன விடுதலை அமைப்பு 1988-இல் தனி நாடு அறிவித்தது. இருந்தாலும், பாலஸ்தீனம் தற்போது ஐ.நா.வில் உறுப்பினா் இல்லாத பாா்வையாளா் அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது.
தற்போது இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளில், பிரான்ஸ்தான் பாலஸ்தீனத்தை முதல்முறையாக அங்கீகரிக்கவுள்ளது. பிரான்ஸின் இந்த முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடா்பாக பெரிய அளவிலான விவாதங்கள் நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.