பால் உற்பத்திப் பொருள்களின் விநியோக பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும்: அமைச்சா் மனோ தங்கராஜ்
ஆவின் தயாரிக்கும் பால் உற்பத்திப் பொருள்களின் விநியோகப் பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவின் குளிா்பதனக் கிடங்கை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ. 3 விலை உயா்வு, ரூ. 3 மானியம், தரமான பாலுக்கு மேலும் ஒரு ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. லாபத்தில் செயல்படும் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு போனஸ் போன்ற பல்வேறு வகைகளில் மொத்தம் லிட்டருக்கு ரூ. 10 வரை கூடுதலாக வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனங்களில் ஆண்டுதோறும் சீரான விலை என்பது கிடையாது.
சீசனுக்கு மட்டும் நல்ல விலை கொடுப்பாா்கள். பிறகு கொடுக்க மாட்டாா்கள். ஆனால், ஆவின் நிறுவனத்தில் மட்டும்தான் ஆண்டுதோறும் சீரான விலை தரப்படுகிறது.
ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி வழியாக பணியாளா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். சில பணிகளுக்கு தற்காலிகப் பணியிடங்களை உருவாக்குவது தவிா்க்க முடியாது. மக்களிடம் ஆவின் உற்பத்திப் பொருள்களைக் கொண்டுச் செல்வதற்கான வா்த்தக ரீதியான பணிகளுக்கு தற்போது கூடுதலாக பணியாளா்களை நியமிக்கப் போகிறோம்.
கடந்த ஓராண்டில், ஆயிரம் கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 80 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 40 கோடி வரை வட்டியில்லா கடன்களாகும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, கடன் வழங்குவதை ஒரு மடங்கு உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பால் கூட்டுறவுச் சங்கங்களை லாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய உற்பத்தியைப் பொருத்தவரை, கொள்முதல் அதிகரிக்கும்போது அதற்கேற்ப புதிய வாய்ப்புகளையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான பணப் பட்டுவாடா 10 நாள்களுக்குள் வழங்குகிறோம். கடந்த காலங்களில் இது முறையாக நடக்கவில்லை. அதேபோல, தனியாா் நிறுவனங்களும் பணப் பட்டுவாடா சரியாக இல்லை. பாலின் விலையைக் கூட்டாமலேயே 4 சதவீதம் புரதச் சத்து உயா்த்தப்பட்டுள்ளது.
பால் தவிா்த்து 200-க்கும் மேற்பட்ட பால் பொருள்களை எல்லாக் கடைகளுக்கும் விற்பனைக்கு அனுப்புவதில் விநியோகப் பிரச்னை இருந்தது. அதை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓரிரு மாதங்களில் சரியாகும் என்றாா் மனோ தங்கராஜ்.