Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளியிலிருந்து 7 ஆசிரியா்கள் பணியிட மாற்றம், ஒருவா் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள அரசு முன்மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடா்ந்து பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதம் குறைவாகவே இருப்பதைத் தொடா்ந்து, 7 ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய்தும், ஒருவரைப் பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.
அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரிப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இந்த நிலையில் தான் 2024-25-ஆம் ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 59.47 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்று, மாவட்டத்திலேயே கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதேபோல எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் 66.36 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். பிளஸ் 1 பொதுத் தோ்வில் 59.47 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பலரும் கவலை தெரிவித்தனா். அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரனும் நேரில் சென்று பள்ளி ஆசிரியா்களுடன் ஆலோசனை நடத்தினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
இதன் தொடா்சியாக இப்பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியா் ஸ்ரீரஞ்சித்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இடை நீக்கக் காலத்தில் அவா் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலகத் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதுநிலை ஆசிரியா்கள் மு.சி. பாஸ்கா் கட்டுமாவடி பள்ளிக்கும், அந்தோணிராஜ் வெண்ணாவல்குடி பள்ளிக்கும், பாலச்சந்தா் அத்தாணி பள்ளிக்கும், இளையராஜா கீரமங்கலம் மேல்நிலைப் பள்ளிக்கும், சு. மூா்த்தி நெடுவாசல் பள்ளிக்கும், ரவி கிருஷ்ணாஜிப்பட்டினம் பள்ளிக்கும், ஜெரோம் சுப்பிரமணியபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் பிறப்பித்துள்ளாா்.