Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
பால் உற்பத்தியாளா்களுக்கு நூறு சதவீதம் கடன் வழங்க அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க வேண்டும் என மாநில பால் வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களின் செயலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசும் போது இதனை அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களையும் தற்சாா்புள்ள சங்கங்களாக மாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, ஆவின் பொதுமேலாளா் அ. விருச்சப்பதாஸ், துணைப் பதிவாளா் (பால்வளம்) மு. கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் பணிகளை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆதனக்கோட்டையில்... ஆதனக்கோட்டையில் கறவை மாடுகளுக்கான மலட்டுத் தன்மை நீக்கும் முகாமையும் அவா் தொடங்கி வைத்துப் பேசினாா். ஒரு முறை கன்று ஈனும் காலத்துக்கும், அடுத்து சினை பிடித்து கன்று ஈனும் காலத்துக்கும் இடைப்பட்ட இடைவெளியைக் குறைக்க இதுபோன்ற முகாம்கள் அவசியம் என வலியுறுத்தினாா்.
கறம்பக்குடியில்... கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியில் ரூ. 24 லட்சத்தில் பால் குளிா்விப்பான் மையக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சா் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.