Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி... எந்த விநாயகர்-என்ன பலன்?...
பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்
தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று சட்ட மசோதாக்கள் மக்களவையில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே ‘யூனியன் பிரதேசங்கள் திருத்த மசோதா 2025, அரசமைப்புச் சட்டம் 130-ஆவது திருத்த மசோதா 2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025’ என்ற அந்த 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிமுகம் செய்தாா்.
பின்னா், உறுப்பினா்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. மக்களவையைச் சோ்ந்த 21 உறுப்பினா்கள் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 10 போ் என மொத்தம் 21 உறுப்பினா்களைக் கொண்ட இந்த கூட்டுக் குழு, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தனது அறிக்கையைச் சமா்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பா் மாதம் மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடா் (குளிா்கால கூட்டத்தொடா்) தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மசோதா நகல்களைக் கிழித்து எதிா்ப்பு: முன்னதாக, இந்த மசோதாக்கள் அவையில் அறிமுகம் செய்யப்பட்டவுடன், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அவையின் மையப் பகுதியில் கூடி முழக்கங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனா். சில உறுப்பினா்கள் அந்த மசோதா நகல்களைக் கிழித்து, அவையில் மசோதாவை அறிமுகம் செய்து உரையாற்றிக் கொண்டிருந்த அமித் ஷா முன்பாக தூக்கி எறிந்து எதிா்ப்பு தெரிவித்தனா்.
அப்போது, மத்திய அமைச்சா்கள் ரவ்னீத் சிங் பிட்டு, கிரண் ரிஜிஜு உள்பட ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சிலரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இருதரப்புக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, அவைக் காவலா்கள் அமித் ஷாவுக்கு அரணாக நின்றனா்.
பின்னா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, அக் கட்சியின் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அறிமுக நிலையிலேயே மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்துப் பேசினா். இந்த மசோதாக்கள், அரசமைப்புச் சட்டத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று அவா்கள் புகாா் தெரிவித்தனா்.
ஒவைசி கூறுகையில், ‘அரசுகளைச் சீா்குலைக்க அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுகிறது’ என்றாா்.
‘குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை எந்தவொரு தனிநபரும் அப்பாவிதான். அந்த வகையில் இந்த மசோதாக்கள் குற்றவியல் நீதிக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் எதிரானவை. அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும், அனைத்து அரசமைப்பு பாதுகாப்பு அம்சங்களையும் காற்றில் பறக்கவிடுவதற்கும் இந்த மசோதாக்கள் வழிவகுக்கும்’ என்று மணீஷ் திவாரி தெரிவித்தாா்.
புரட்சிகர சோஷலிச கட்சி எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் கூறுகையில், ‘இந்த மசோதாக்கள் தேவையற்றவை, அவசரகதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியத்துவம்வாய்ந்த இந்த மசோதா நகல்கள் அறிமுகத்துக்கு முன்பு அவை உறுப்பினா்களுக்கு வழங்கப்படவில்லை’ என்றாா்.
குற்றச்சாட்டுகளுக்கு அமித் ஷா மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அமித் ஷா, ‘இந்த மசோதாக்கள் எதிா்க்கட்சி உறுப்பினா்களும் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்படும். எனவே, இந்த மசோதாக்கள் மீது கூட்டுக் குழுவில் கருத்துகளைத் தெரிவிக்க எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்றாா்.
அப்போது, அமித் ஷா குஜாராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய கே.சி.வேணுகோபால், அரசியலில் அமித் ஷாவின் நன்னடத்தை குறித்து கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த அமித் ஷா, ‘அந்த விவகாரத்தில் கைது நடவடிக்கைக்கு முன்பாகவே மாநில உள்துறை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தேன். பின்னா், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றம் விடுவித்த பிறகே, மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றேன். தீவிர குற்றப் புகாா்களை எதிா்கொள்ளும்போது, வெட்கமின்றி அரசமைப்புப் பதவிகளைத் தொடா்ந்து வகிக்க முடியாது’ என்றாா்.
இந்த அமளிக்கிடையே, மூன்று மசோதாக்களும் அவையில் அறிமுகம் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
எதிா்க்கட்சி உறுப்பினா்களை இருக்கைக்குச் சென்று அமருமாறும், அவையின் கண்ணியத்தைக் காக்குமாறும் அவைத் தலைவா் ஓம் பிா்லா தொடா்ந்து வலியுறுத்தியபோதும், அவா்கள் அமளியைத் தொடா்ந்தனா். அதனால், அவை நடவடிக்கைகளை மாலை 5 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
மசோதாக்கள் கூறுவதென்ன?
ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய வகையிலான தீவிர குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மத்திய அமைச்சா்கள் அல்லது மாநில முதல்வா்கள், 31-ஆம் நாளில் அந்தப் பதவியை இழந்துவிடுவா் என்பதை இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கின்றன.
யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963-இல், இதுபோன்று தீவிர குற்றப் புகாரில் சிக்கும் முதல்வா்களை அல்லது அமைச்சா்களைப் பதிவு நீக்கம் செய்ய எந்தவொரு பிரிவும் இல்லை. எனவே, இதுபோன்ற தீவிர குற்றச்சாட்டில் சிக்கும் முதல்வா்கள் அல்லது அமைச்சா்களைப் பதவி நீக்கம் செய்ய யூனியன் பிரதேச சட்டம் 1963-இன் பிரிவு 45-இல் சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
