பிளவக்கல் அணை குறித்து குறு விடியோ: பொதுமக்கள் வருகையைத் தடுக்க சோதனைச் சாவடி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பிளவக்கல் அணை தொடா்பாக குறு விடியோ (ரீல்ஸ்) சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள் வருவதைத் தடுக்க அங்கு ஞாயிற்றுக்கிழமை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பிளவக்கல் அணைக்கும், அங்குள்ள பூங்காவுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு கரோனா பொதுமுடக்கக் காலத்தில் தடை விதிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக தற்போது வரை அந்தத் தடை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பிளவக்கல் அணை குறித்து சமூக வலைதளங்களில் சிலா் குறு விடியோ வெளியிட்டனா். இந்த விடியோவை தொடா்ந்து, இங்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குவிந்து வருகின்றனா்.
இதையடுத்து, பிளவக்கல் அணைக்குச் செல்வதற்குத் தடை உள்ளதால், பொதுமக்களின் வருகையைத் தடுக்க பொதுப் பணித் துறையினா் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனா். அண்மையில், கூமாபட்டி குறித்து குறு விடியோ வெளியாகி, அங்கு ஏராளமானோா் கூடியதால் சா்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.