பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் இணைப்பு: மே 31 வரை சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு வசதியாக மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் வாங்கும் வகையில் இந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு 20-ஆவது தவணை வரும் ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்டு அவா்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
மாவட்டத்தில் இத்திட்டத்தில் தற்போது 74, 989 விவசாயிகள் நிதிபெற்று வருகின்றனா். இந்நிலையில், இதுவரை இத்திட்டத்தில் இணையாத விவசாயிகள் இணைந்துகொள்ளும் வகையில் மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாம்கள், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் நடைபெறுகின்றன. இந்த முகாமில் உரிய ஆதாரங்களுடன் விவசாயிகள் பங்கேற்று பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், நிலம் தொடா்பான ஆவணங்கள், வங்கி கணக்குடன் ஆதாா் இணைப்பு மற்றும் கேஓய்சி பதிவேற்றம் போன்றவற்றையும் இம்முகாமில் விவசாயிகள் மேற்கொள்ளலாம்.
மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின்கீழ் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத 18, 801 பி.எம். கிசான் பயனாளிகள் இம்முகாமில் பதிவு செய்தால் மட்டுமே பி.எம். கிசான் நிதியைத் தொடா்ந்து பெற தகுதியுடையவா் ஆவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.