செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
புதுச்சேரி: `பாஜக பிரமுகரை காவு வாங்கிய பாரதியார் நிலம்!’ - பழிக்குப் பழியா… பகைக்கான விலையா ?
விபசார வழக்கில் கைது
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் அகில இந்திய OBC பிரிவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவரின் மகன் உமாசங்கர். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. அதேபோல விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் விபசார வழக்குகளும் இருக்கின்றன.

பா.ஜ.க-வில் மாநில இளைஞரணித் தலைவராக இருந்த இவர், அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர விசுவாசியாக மாறினார். அந்த விசுவாசத்தின் அடையாளமாக கடந்த 2022-ம் ஆண்டு உமாசங்கரின் பிறந்தநாளுக்கு அவரது வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்த அமைச்சர் நமச்சிவாயம், அதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அப்போதுதான் கோட்டக்குப்பம் விபசார வழக்கில் கைதானார் உமாசங்கர்.
எம்.எல்.ஏ ஜான்குமாருடன் நெருக்கம்
அந்த வழக்கில் சிறை சென்று வெளியே வந்ததும் தன்னுடைய வீடு இருக்கும் காமராஜர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமாருடன் நெருக்கம் காட்டினார் உமாசங்கர். அந்த விபசார வழக்கினாலும், அப்போது ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் முன்னணி தலைவர்களையே கடுமையாகப் பேசியதாலும் அவரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு எம்.எல்.ஏ ஜான்குமாருக்காக தொகுதி வேலைகளை பார்த்துக்கொண்டு, அவருடனேயே வலம் வந்தார்.

இந்த நிலையில்தான் தமிழக லாட்டரி வியாபாரி மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டினை, புதுச்சேரி அரசியலில் புகுத்துவதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தார் எம்.எல்.ஏ ஜான்குமார். அதற்கான அனைத்துப் பணிகளுக்கும் எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு பக்கபலமாக இருந்தார் உமாசங்கர். தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பணிகள், முதலியார்பேட்டையில் சார்லஸ் மார்ட்டினின் அலுவலகம் திறந்தது என அனைத்துப் பணிகளிலும் ஜான்குமாரின் நிழலாக மாறினார் உமாசங்கர்.
சார்லஸ் மார்ட்டினின் பிறந்தநாள் ஏற்பாடுகள்
2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, புதுச்சேரியில் தன்னுடைய பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவெடுத்தார் சார்லஸ் மார்ட்டின். அதன்படி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கருவடிக்குப்பம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கலந்து கொண்டு சார்லஸ் மார்ட்டின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரௌடி உமாசங்கர் செய்து வந்தார்.

இந்த நிலையில் 26-ம் தேதி நள்ளிரவு சுமார் 12.00 மணிக்கு அந்த தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முன்னேற்பாடு பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த உமாசங்கரை, திடீரென ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. விபரீதம் தன்னை சூழ்ந்துவிட்டதை உணர்ந்த உமாசங்கர், அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். ஆனால் அதற்குள் அவரை அந்தக் கும்பல் அரிவாள்களால் வெட்டத் துவங்கியது. அதை தடுக்க முயன்றபோது அவரது இடது கை துண்டாகி விழுந்தது.
தலைக்கும் முகத்திற்கும் வைக்கப்பட்ட குறி
அதில் நிலைதடுமாறி விழுந்தவரின் தலையையும், முகத்தையும் மட்டும் குறிவைத்து சரமாரியாக வெட்டியது அந்தக் கும்பல். அதில் தலை சிதைந்து அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார் உமாசங்கர். சம்பவம் நடைபெற்ற அன்று மாலையே கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கர்ணன், பாண்டியன் பாலாஜி,செல்வகணபதி, கோபிகிருஷ்ணா, அருண்குமார், கார்த்திக், விஸ்வநாதன், வெற்றி, அரவிந்தன் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்துப் பேசிய சீனியர் எஸ்.பி கலைவாணன், ``இந்த வழக்கில் முதல் குற்றவாளி கர்ணன் (எ) திருநாவுக்கரசு. இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது இவர் மீது 4 கொலை வழக்குகள் இருக்கின்றன. அன்றைய தினம் சொமேட்டோ ஊழியரைப் போல வந்து உமாசங்கர் தனியாக இருப்பதைப் பார்த்த ஒருவர், மற்ற 8 பேருக்கும் சிக்னல் கொடுத்தார்.
ரௌடி கர்ணன்
அதையடுத்துதான் உமாசங்கர் படுகொலை செய்யப்பட்டார். ரௌடி உமாசங்கரும், அதே பகுதியைச் சேர்ந்த ரௌடி கர்ணாவும் எதிரெதிர் கோஷ்டிகள். இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தன்னுடைய இடத்தை உமாசங்கர் தனியார் பாருக்கு வாடகை விட்டிருந்தார். அதற்கு ஊர் மக்களும், இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்படி இவர்களுக்குள் பல பிரச்னைகள் இருந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில்தான் திட்டமிட்டு உமாசங்கரை கொலை செய்திருக்கிறார்கள்” என்றார்.
பாரதியாரின் குயில் தோப்பு
ஆனால் இந்தக் கொலையின் பின்னணியில் வேறு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள் கருவடிக்குப்பம் பகுதி மக்கள். நம்மிடம் பேசிய அவர்கள், ``கருவடிக்குப்பம் பகுதியில்தான் பாரதியார் தங்கி பாடல் இயற்றிய குயில்தோப்பு இருக்கிறது. முழுக்க முழுக்க அரசுக்கு சொந்தமான அந்த இடம் சுமார் ரூ.150 கோடி மதிப்புடையது. ஆனால் பல முக்கிய புள்ளிகள் அந்த இடத்தை கபளீகரம் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தின் ஒரு பகுதியில் காமராஜர் மணிமண்டபம் கட்டப்பட்டது. மீதமிருக்கும் நிலத்தையும் அரசு கையகப்படுத்தி வீடற்ற அப்பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்று, சுமார் 500 பேருடன் ஊர்வலமாகச் சென்று எம்.எல்.ஏ ஜான்குமாரிடம் மனு அளித்தார் உமாசங்கர். அதன்பிறகு அவர் மூலம் முதல்வர் ரங்கசாமியிடமும் மனு அளித்தார்.
இந்த `மூவ்’ மூலம் அந்த முக்கியப் புள்ளிகளை பகைத்துக் கொண்டார் உமாசங்கர். அந்தப் பகைக்கு விலையாகத்தான் இப்போது அவர் உயிர் காவு வாங்கப்பட்டிருக்கிறது என்பது புதுச்சேரியில் உள்ள அனைவருக்குமே தெரியும். அந்த குயில்தோப்பு நிலம் மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் சுவரைப் போன்றது. அரசு அந்த நிலத்தை கையகப்படுத்தவில்லை என்றால் இன்னும் எத்தனை பேரை காவு அது வாங்கப் போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்” என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
விபரீதங்களுக்கு முன்பு விழித்துக் கொள்ளுமா புதுச்சேரி அரசு ?