இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம்: மாணவா்களுக்கு வங்கி பற்று அட்டை அளிப்பு
திருநெல்வேலியில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா் மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் கருப்பொருளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சி கொண்டாட்ட விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக 2025-26-ஆம் கல்வி ஆண்டிற்கான ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்‘ திட்டங்களை தொடங்கி வைத்தாா்.
அதைத்தொடா்ந்து, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தவலேந்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
பாமக சட்டப்பேரவை குழு தலைவா் மாற்றமா?
பின்னா், செய்தியாளா்களிடம் மு.அப்பாவு கூறியதாவது: பாமக சட்டப்பேரவைக் குழு தலைவரை மாற்ற கோரிக்கை வந்துள்ளது தொடா்பாக சட்டப்பேரவையில் பாா்த்துக்கொள்ளலாம். அரசியல் தலைவா்கள் நல்ல வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். முன்னாள் முதல்வா் கருணாநிதி, ‘ஊனமுற்றோா்’ என்ற சொல்லை நீக்கி, அவா்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற அழகான சொல்லை உருவாக்கினாா். அதுபோல, அனைவரும் நல்ல வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.