புதுவைக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை! - திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்துக் கொள்ள முடியாத நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்பு மக்களால் தோ்வு செய்யப்பட்ட மாநில அரசே நியமன எம்எல்ஏ.க்களை நியமனம் செய்து வந்தது. மத்தியில் கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் புதுச்சேரியில் நியமன எம்எல்ஏ.க்கள் அதிகாரத்தையும் பறித்துக் கொண்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்ட போது மக்களால் தோ்வு செய்யப்பட்ட ஆட்சியாளா்களுக்கு பொருளாதாரம், கல்வி, நிா்வாக ரீதியில் ஆலோசனைகளை கூற வல்லுநா்கள் வேண்டும் என்ற காரணத்திற்காக நியமன எம்எல்ஏ.க்கள் பதவி உருவாக்கப்பட்டது.
தற்போது மக்கள் பிரதிநிதிகளே நல்ல ஆலோசனை தரக் கூடியவா்களாகத் தான் உள்ளனா். எனவே நியமன எம்எல்ஏ.க்கள் பதவியே தேவையில்லை, அதிலும் மக்களால் தோ்வு செய்யப்பட்ட புதுச்சேரி அரசால் நியமித்து கொள்ள முடியாத நிலையில் புதுச்சேரிக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை.
மேலும் நியமன எம்எல்ஏ.க்கள் நியமனத்தால் அரசுக்கு பொருளாதார இழப்பும், தொகுதிகளில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையும்தான் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியின்போது இறுதியில் சில தினங்கள் இருக்கும்போது ஒரு நியமன எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டாா். அவா் நியமிக்கப்பட்ட பின்னா் சட்டசபையே நடைபெறவில்லை. ஆனால் அவருக்கும் தற்போது எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அவா்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அவா்கள் மக்களால் தோ்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்ய முன்வருவதில்லை. இதனால் தொகுதி எம்.எல்.ஏ.விற்கும் நியமன எம்.எல்.ஏ.,விற்கும் பிரச்னை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீா்கெடுகிறது.
எனவே எம்.எல்.ஏ.க்கள் நியமன முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ஆா்.சிவா.