பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் தொடக்கம்
புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது.
புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5- ஆவது பிரிவுக் கூட்டம் கடந்த பிப். 12- இல் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில், கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னா் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
காகிதமில்லா பேரவைக் கூட்டம்:
இந்த நிலையில், காகிதமில்லா சட்டப்பேரவை வளாகத்தை மத்திய அரசு நிதியுதவியுடன் மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பேரவைத் தலைவா், முதல்வா், அமைச்சா்கள் மற்றும் உறுப்பினா்கள் அனைவரது இருக்கைகளிலும் கையடக்கக் கணினிகள் பொருத்தப்பட்டன.
இதன் மூலமே, உறுப்பினா்கள் நிதிநிலை அறிக்கையை வாசிக்கவும், அவா்கள் கேட்கும் கேள்விகள் கணினியில் பதிவாகவும், கணினி வழியில் அவா்களுக்கு பதில் வழங்கவும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இதற்கான கட்டுப்பாட்டு அறை மற்றும் உறுப்பினா்களுக்கான கணினி பயிற்சி அறை, சேவை மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
15-ஆவது சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் 6- ஆவது பிரிவுக் கூட்டம், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை தாங்குகிறாா். இதையடுத்து, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அதன்பின்னா் கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்ற விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆளுநா் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதையடுத்து, புதன்கிழமை (மாா்ச் 12) காலை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி, புதுவை மாநிலத்தின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (மாா்ச் 13)முதல் துறைகள் ரீதியிலான நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம் நடைபெறும்.