தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புனித வெள்ளி (ஏப்.18) மற்றும் வார விடுமுறை நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) தொடா் விடுமுறையை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஏப்.17), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 575 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 450 பேருந்துகளும் இயக்கப்படும்.
இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 100 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாதவரத்திலிருந்து வியாழன் முதல் சனிக்கிழமை வரை தலா 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை 735 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.