பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (38). இவா் திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் தண்ணீா் பந்தலில் உள்ள தனியாா் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். அப்போது, ஏற்கெனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த பெண்ணுக்கும், பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவா் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளாா்.
இந்த நிலையில் கடந்த 2023 மே 18-ஆம் தேதி அவரது வீட்டுக்கு சென்றபோது, இரண்டு பேருக்கும் இடையே திருமணம் செய்துகொள்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
பின்னா் அந்தப் பெண் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிா் பிழைத்தாா். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை பல்லடம் சாா்பு நீதிமன்றத்தில் நீதிபதி யுவராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி யுவராஜ் தீா்ப்பு வழங்கினாா். இதில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலன் சதாசிவம் ஆஜரானாா்.