போரிட்டால்தான் அச்சுறுத்தல் இருக்காது: இஸ்ரேல் பிரதமர்
காஸாவில் போரிடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனிடையே, தங்களுக்கு வேறு வழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது, காஸாவில் போரிடுவதைத்தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும்வரை போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது.
அவ்வாறு போரிட்டால்தான், இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது. போரைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
இஸ்ரேலுக்குள் கடந்த 2023 ஆம் ஆண்டில் அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்டவா்களை அங்கிருந்து பணயக் கைதிகளைக் கடத்திச் சென்றனா். அதையடுத்து அந்த அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் அந்த நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.
இதனிடையே அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகளின் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.
எனினும், அந்தப் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தையில் கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததால் காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது.
இதையும் படிக்க:நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்விநேரம்!