போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்பிலான நிலம் மோசடியா? - போராட்டத்தில் விவசாயிகள்- நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வள்ளிபுரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான 2.97 ஏக்கர் நிலம் மோகனமூர்த்தி, சரவணக்குமார் ஆகிய சகோதரர்கள் இருவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சொத்தின் வாரிசுதாரர் என கடந்த 1937-ஆம் ஆண்டு இறந்த ராயர் என்பவரின் கொள்ளுப் பேரன் எனக் கூறி பரமேஸ்வரன் என்பவர், 40 நாள்களுக்கு முன்பு குன்னத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பழனிசாமி, கோபால், பழனாள், முத்து வடுகநாதன், பாண்டி ஆகியோருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலத்தை வாங்கியவர்கள், அங்கு கம்பி வேலி அமைக்கும்போதுதான், அமாவாசையிடம் இருந்து நிலம் வாங்கிய சகோதரர்கள் இருவருக்கு அவர்களுடைய விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குன்னத்தூர் காவல் நிலையம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இது குறித்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், " போலி ஆவணங்களைத் தயார் செய்து, குன்னத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் சொத்துகளை கிரையும் செய்துள்ளனர். 1937-ஆம் ஆண்டு ராயர் என்பவர் இறந்த நிலையில், அவரது இறப்புச் சான்றிதழ், மோசடியான வாரிசு சான்றிதழ்களை பெற்று வாரிசுதாரர்கள் எனக் கூறி இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்தைப் பத்திரப் பதிவு செய்தபோது குன்னத்தூர் சார் பதிவாளர் வில்லங்க சான்றிதழ்களை பார்வையிடாமல், முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சார் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி ஆவணங்கள் மூலம் இடத்தை கிரையும் பெற்ற பரமேஸ்வரன், பழனிச்சாமி, கோபால், பழனாள், முத்து வடுகநாதன், பாண்டி உட்பட 7 பேரின் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. போலியாக பத்திர பதிவு செய்து கொடுத்த குன்னத்தூர் சார் பதிவாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். போலியாக வாரிசு சான்றிதழ் வழங்கியதற்காக வருவாய்த் துறையினர் மீதும் போலி ஆவணங்களைத் தயாரித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. எதிர்த் தரப்பில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருதரப்பிலும் விசாரணை செய்த பின்னர் விரிவான அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.