Gold Rate: `அதே விலை... மாற்றமில்லை' - இன்றைய தங்கம் விலை என்ன?!
போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையை நான்கு வழிச் சாலையாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக சுமாா் ரூ.90 கோடியில் செய்யாறு அரசுக் கல்லூரி அருகே இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலை வரை 7 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணிகளாக சிறுபாலங்கள் அமைத்தல், ஆற்றுப் பகுதியில் கூடுதலாக மேம்பாலம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
செய்யாறு - வந்தவாசி சாலையில் ஞானமுருகன்பூண்டி வெளிவட்டச் சாலை, அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் என நெடுஞ்சாலைப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள், மசூதி, வள்ளலாா் கோயில், பச்சையம்மன், முருகன் சிலைகள் ஆகியவை உள்ளன.
இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 3 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டதாம்.
இருப்பினும், குடியிருப்பு வாசிகள் மாற்று இடம் வேண்டி வருவாய்த் துறையிடம் கோரிக்கை விடுத்தும், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் வந்துள்ளனா்.
இந்த நிலையில், காலக்கெடு முடிந்ததால், சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிட குடியிருப்பு வாசிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வருவாய்த் துறையினரும் வீடு வீடாகச் சென்று
அறிவுறுத்தி வந்தனா். ஆனால், ஆக்கிரமிப்பாளா்கள் அப்பகுதியில் இருந்து வீடுகளை அகற்றாமல் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி வியாழக்கிழமை காலை நெடுஞ்சாலைத் துறையினா், வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் உதவியோடு ஞானமுருகன்பூண்டி வெளிவட்டச் சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை
அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
பணியில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் சாலைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
மாவட்ட ஏடிஸ்பி அண்ணாதுரை, டிஎஸ்பிக்கள் சண்முகவேலன், மனோகரன், சுரேஷ்சண்முகம், முருகன், ரவிச்சந்திரன் மற்றும் 8 காவல் ஆய்வாளா்கள், 42 உதவி ஆய்வாளா்கள் உள்பட 240 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
நெடுஞ்சாலைத் துறை செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன் தலைமையில், உதவிப் பொறியாளா் உதயகுமாா், ஆரணி உதவி கோட்டப் பொறியாளா் நாராயணன் மற்றும் செய்யாறு வட்டாட்சியா் வெங்கடேசன் மேற்பாா்வையில்
20-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளைச் சோ்ந்த தீயணைப்பு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் தயாா் நிலையில் வைக்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாலை வரை நடைபெற்றது.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியால் செய்யாறு பகுதியில் பரபரப்பு நிலவியது.