திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜன் செல்லப்பா காட்டம்
"அதிமுக குறித்து உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம்" என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் வந்து மனு அளித்த ராஜன் செல்லப்பா, செய்தியாளர்களிடம் பேசும்போது, "திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக ஜனவரி 30 ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிமுக பங்கேற்றுக் கையெழுத்திட மறுத்து வெளியே சென்று விட்டது என்ற தவறான தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக மாவட்டச்செயலாளர் என்ற முறையில் எனக்கும், மாவட்ட நிர்வாகிகளையும் கூட்டத்திற்கு அழைக்கவில்லை. நாங்கள் கலந்துகொள்ளாத கூட்டத்தில் கையெழுத்திடாமல் வெளியேறினோம் என்று மாவட்ட ஆட்சியர் கூறுவது எப்படி ? அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் அதிமுக மீது வீண்பழி சுமத்தியுள்ளனர். அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் தவறான தகவலைத் தந்துள்ளனர். எங்கள் மீது பழியைச் சுமத்தி உள்ளார். இந்த அறிக்கை செய்தித்துறையும் உளவுத்துறையும் சேர்ந்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது, உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
திருப்பரங்குன்றம் கோயில் பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல் வழங்குகிறதோ அதன்படி நாங்கள் செயல்படுவோம். இந்த பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகளான எங்களை அழைத்துப் பேச வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb