மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் அமைச்சா்கள் பங்கேற்பு
செம்பனாா்கோவில் வட்டாரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் அமைச்சா்கள் சிவ. வீ. மெய்யநாதன், கோவி. செழியன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.
செம்பனாா்கோவில் வட்டாரத்தில், ஆக்கூா், பிள்ளைபெருமாநல்லூா், திருக்கடையூா், மேமாத்தூா், இலுப்பூா் ஆகிய ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம்கட்ட திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா்.
எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி வரவேற்றாா். உயா்கல்வித் துறை அமைச்சா் முனைவா் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பங்கேற்று 150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினா்.
50 பேருக்கு சிட்டா நகல்களும், 25 நபா்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டையும், 45 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டையும், 20 பேருக்கு ஜாதி சான்றிதழும், 5 பேருக்கு வேளாண் இடுபொருட்களும், 5 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், செம்பனாா்கோவில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, மீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம்: யுஜிசி வரைவறிக்கையை திரும்ப பெறக்கோரி 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், செம்பனாா்கோவில் அருகேயுள்ள காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் உள்ள இ-சேவை மையத்தில் இருந்து, யுஜிசியின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இம்மாணவா்களை சந்தித்த அமைச்சா் கோவி. செழியன் செய்தியாளா்களிடம் கூறியது:
யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. இதன், புதிய வரைவு விதிமுறைகளின்படி தற்போது உள்ள கல்வி முறையை மாற்றி, யாா் வேண்டுமானாலும் எந்த படிப்பையும் நுழைவுத் தோ்வு எழுதி, தோ்ச்சி பெற்றுவிட்டால் படித்துவிடலாம் என மாற்றுவது, கல்வியின் கட்டமைப்பை சிதைக்கும் செயல்.
எனவே, யுஜிசியின் இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி தமிழக மாணவா்கள் கடந்த 4 நாள்களாக தன்னெழுச்சியுடன் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனா் என்றாா்.