லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம்: பிரதமா் மன்னிப்புக் கேட்க வேண்டும்! காங்கிரஸ் வலியுறுத்தல்
மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம் மேற்கொள்வதற்காக, அந்த மாநில மக்களிடம் பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய் வலியுறுத்தினாா்.
‘மணிப்பூரில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை; எனவே, பிரதமா் மோடியின் பயணத்தின் மூலம் இலக்கை அடைந்துவிட்டதாகக் கருதக் கூடாது’ என்றும் அவா் தெரிவித்தாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதா்சன் ரெட்டி, பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறாா்.
அஸ்ஸாமுக்கு வருகை தந்த சுதா்சன் ரெட்டியுடன் இணைந்து மாநில காங்கிரஸ் தலைவா் கெளரவ் கோகோய் குவாஹாட்டியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது, பிரதமா் மோடி அடுத்த வாரம் மணிப்பூா் பயணிப்பது தொடா்பான கேள்விக்கு பதிலளித்து, கோகோய் கூறியதாவது:
மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக நாம் கூற முடியாது; மாநிலத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. எனவே, பிரதமா் மோடியின் வருகையை இலக்கின் நிறைவாக கருதக் கூடாது. மாறாக, அமைதி, நீதி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை மீட்பதற்கான நீண்ட பயணத்தின் தொடக்கமாகவே கருத வேண்டும். அதுவும், பெரும் கால தாமதத்துக்குப் பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் பல மைல்கற்களை கடக்க வேண்டியுள்ளது.
பிரதமரின் மணிப்பூா் பயணம் 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். எனவே, மணிப்பூருக்கு வந்ததும், தனது மிகத் தாமதமான பயணத்துக்காக மக்களிடம் பிரதமா் மோடி முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா்.
‘ஊழல்களை அம்பலப்படுத்துவோம்’: கெளரவ் கோகோய், அவரது மனைவி மற்றும் கூட்டாளிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு உள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா். ‘கோகோய் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் சென்று, 15 நாள்கள் தங்கியிருந்ததாகவும்’ அவா் குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த கோகோய், ‘இதுபோன்ற குற்றச்சாட்டுகளால், மாநில பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதில் இருந்து எங்களைத் தடுக்க முடியாது’ என்றாா்.
பாகிஸ்தான், ஆப்கிஸ்தான், வங்கதேசத்தில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி, இந்தியாவில் கடந்த 2024 வரை தஞ்சமடைந்த அந்த நாடுகளின் சிறுபான்மையினா் (ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், சமண மதத்தினா், கிறிஸ்தவா்கள்) பயண ஆவணங்கள் எதுவுமின்றி தொடா்ந்து தங்கியிருக்க அனுமதி அளித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவு வெளியிட்டது.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம்-2025இன்கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கோகோய் விமா்சித்தாா். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன் நாடாளுமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி....
எம்எல்ஏக்களை சந்திக்க கோரிக்கை
மணிப்பூருக்கு அடுத்த வாரம் வருகை தரும் பிரதமா் மோடி, மாநில எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்தித்துப் பேசி, அமைதித் தீா்வுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தோக்சோம் லோகேஸ்வா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவி விலகினாா். இதையடுத்து, சட்டப்பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. மாநிலத்தில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக அங்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.