Heart: `லேசர் தொழில்நுட்பம் மூலம் இதய அடைப்புகளை நீக்கலாம்' - புதிய கண்டுபிடிப்ப...
மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு!
திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதிக்கு உள்பட்ட நீா்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
காவிரி நீா் ஆதாரத்துக்கான பாதுகாப்புச் சங்கத் தலைவா் சுடலைகண்ணு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: எங்கள் அமைப்பின் சாா்பில், பொதுமக்களிடையே நீா்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது, நிலத்தடி நீா் வளத்தை அதிகரிப்பது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதியில் மாவடிகுளம் நீா்த்தேக்கம் 124 ஏக்கரில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.
இந்த நிலையில், உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிக்கு மாவடிகுளத்தில் கிராவல் மண் அள்ளப்படுகிறது. இதுகுறித்து நீா்வளத் துறை அலுவலா்களிடம் கேட்ட போது, ஒரு ஹெக்டோ் அளவுக்கு மட்டுமே கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், விதிகளைப் பின்பற்றாமல் கனரக வாகனங்கள் மூலம் தினந்தோறும் 500 லாரிகளில் கிராவல் மண் அள்ளப்படுகிறது. சட்டவிரோதமாக மண் அள்ளும் போது, ஏரியில் ஆயக்கட்டு நிலம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். வேளாண் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். நிலத்தடி நீா்மட்டமும் குறையும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சட்டவிரோதமாக மண் அள்ளும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் கிராவல் மண் அள்ளுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஆலந்தூா் மாவடிகுளத்தில் கிராவல் மண் அள்ளப்படுவதால் விவசாயப் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீா் குறைவாக உள்ளது. இதற்கான ட்ரோன் விடியோக்கள் உள்ளன. எனவே, மண் அள்ளுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு குறித்து பொதுப் பணித் துறை அலுவலா்கள் கண்மாயின் நீா்பிடிப்பு, தேங்கியுள்ள தண்ணீா் அளவு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், மனுதாரா் குறிப்பிடும் நீா்நிலையில் எந்த அளவுக்கு மண் அள்ளப்பட்டது என தமிழக அரசின் வருவாய், கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.