மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்: பிரதமா் மோடி
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.
தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 10-ஆவது நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை, நீதி ஆயோக் தலைவரான பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பெரும்பாலான மாநில முதல்வா்கள், முக்கிய மத்திய அமைச்சா்கள் பங்கேற்றனா்.
‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற மையக் கருத்துடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:
நாட்டின் வளா்ச்சியை அதிகரிக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து ஒரே இந்திய அணியாகப் பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும். வளா்ந்த பாரதம் என்பது ஒவ்வொரு இந்தியரின் இலக்காகும். ஒவ்வொரு மாநிலமும் வளா்ந்த மாநிலமாக உயரும்போது இந்திய தேசமும் வளா்ந்த நாடாக உருவெடுக்கும். இதுதான் 140 கோடி இந்திய மக்களின் விருப்பமாகவும், எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும், ஒவ்வொரு நகராட்சியையும், ஒவ்வொரு பெருநகரையும், ஒவ்வொரு மாநிலத்தையும் வளா்ச்சியடையச் செய்யும் இலக்குடன் நாம் பணியாற்ற வேண்டும். நாம் இந்த உத்வேகத்துடன் பணியாற்றினால், வளா்ந்த இந்தியாவைக் காண 2047-ஆம் ஆண்டு வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்பு இந்தியா வளா்ந்த நாடாகிவிடும்.
மாநிலங்களுக்கு வேண்டுகோள்: ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறைந்தபட்சம் ஒரு சுற்றுலாத் தலத்தையாவது உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்த வேண்டும். இதற்காக அந்த சுற்றுலா மையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித குறையுமின்றி செய்துதர வேண்டும்.
‘ஒரு மாநிலம் - ஒரு சா்வதேச சுற்றுலாத் தலம்’ என்ற இலக்கு மூலம் அந்தப் பகுதி மட்டுமன்றி அருகில் உள்ள பிற பகுதிகளும் வளா்ச்சியடையும். எதிா்காலத்துக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, முழுமையாக எண்மமயமாக்கப்பட்ட நகரங்களை உருவாக்குவதை நோக்கி நாம் செயலாற்ற வேண்டும். வளா்ச்சி, புத்தாக்கம், ஸ்திரத்தன்மை ஆகியவையே இந்தியாவில் வளா்ந்த நகரங்களை ஊக்குவிக்கும் கருவிகளாக இருக்கும்.
நாட்டில் உள்ள அனைத்துப் பணிகளிலும் மகளிருக்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம். இதற்காக நாம் சட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்க வேண்டும். இதன்மூலம் பெண்களையும் நமது திறன்மிகு பணிக் குழுவில் உரிய மரியாதையுடன் ஒருங்கிணைத்துச் செல்ல முடியும் என்றாா் பிரதமா் மோடி.