மனோஜ் பாரதிராஜா: "ரொம்ப பக்குவப்பட்ட பையன்; ஆனா இந்த வயசுல..." - திரைப் பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயற்கையை எய்தியிருக்கிறார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், அஞ்சலி செலுத்திய பின் மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசிய வைரமுத்து, "யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம் நிகழ்ந்திருக்கிறது.

மனோஜ் என்கிற இளைஞன் மறைந்திருக்கிறான். பாரதிராஜா என்ற முதியவர் பேச முடியாமல் இருக்கிறார். ஒரு முதியவர் பேச முடியாமல் இருப்பது போன்ற துயரம் மிகப்பெரியது.
எனக்கு நீ செய்ய வேண்டிய கடமை இருக்கும்போது நான் உனக்குக் கடமை செய்வதாகக் காலம் தாண்டித்துவிட்டதே என்று பாரதிராஜா உணர்வதை என்னால் உணர முடிகிறது.
இந்த சோகத்தில் நம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுக்க வருகிறது.
ஒவ்வொரு இறப்பும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்து விட்டுச் செல்கிறது. கலைஞர்கள் தங்களுடைய உடலைக் கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
கலை மீதி அதீத ஈடுபாட்டுடன் இருப்பவர்கள் உடல் குறித்தான விழிப்புணர்வைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். கலைஞர்கள் தங்களின் உடலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனோஜின் மரணம் கற்றுக் கொடுத்திருக்கிறது" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

"மன அழுத்தம் என்பதுதான் இந்த சிறிய வயதிலேயே உயிரிழக்க முக்கியமான காரணம்" என்று தம்பி ராமையா கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய பாண்டியராஜ், "யாருக்கு யார் ஆறுதல் சொல்றது. ஊருக்கு உணர்வுகளை எப்படி காட்டணும்னு சொல்லிக் கொடுத்தவர் பாரதிராஜா.
எந்த தந்தைக்கும் இப்படியான ஒரு நிலைமை வரக்கூடாது. மனோஜ் ரொம்ப பக்குவப்பட்ட பையன். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்" என்று வருத்தத்துடன் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
"மரணம் வரும் ஆனால் இந்த வயதில் மரணம் வரக்கூடாது. மகனை இழந்த பாரதிராஜாவுக்குத் தைரியம் கொடுக்க எங்களுக்குத் தைரியம் இல்லை. பாரதிராஜாவுக்கு அவர் மகன் என்றால் உயிர். மனோஜ் அருமையான பையன். அவனை எனக்கு ஏழு வயதிலிருந்து தெரியும்" என்று இயக்குநர் பி. வாசு கூறியிருக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்த், "இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இவ்வளவு சிறிய வயதிலேயே நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டதும் அதிர்ச்சி ஆகிவிட்டேன். பாரதி ராஜா சார் எவ்வளவு பெரிய துயரத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
கேப்டனுக்கு 'தமிழ்செல்வன்' என்ற படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் இமயம். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது" என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், நேரில் அஞ்சலி செலுத்திய கே.எஸ்.ரவிக்குமார், "சமுத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மனோஜிடம் மட்டும் நான் தேதி கேட்க மாட்டேன். அப்படத்தின் படப்பிடிப்பு தருணங்கள்தான் எனக்கு நேற்று முழுவதும் தோன்றிக் கொண்டே இருந்தது.

சமுத்திரம் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் கமல் சாரிடமிருந்து ஒரு விருதை மனோஜ் பெற்றார். அதுதான் என்னுடைய முதல் விருது என்று கூட மனோஜ் சொல்லி இருக்கிறார்.
வயது மூப்பு காரணமாகத் தள்ளாடும் பாரதிராஜா சார் இதனால் ரொம்ப உடைந்து போய் இருக்கார்" என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
"நாம் இருக்கும்போதே மகனையோ, மகளையோ இழப்பது மிகவும் கடினமான ஒன்று. இயக்குநர் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார் எனத் தெரியவில்லை.
எந்த வார்த்தையைச் சொல்லியும் அவரைத் தேற்ற முடியாது" என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...