மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி கிராமத்தில் திங்கள்கிழமை மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் காட்சன் சாமுவேல். கிறிஸ்தவ மத போதகரும், பனை மர ஆய்வாளரும், எழுத்தாளருமான இவா், குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறாா்.
காட்சன் சாமுவேலின் குடும்பத்தினா் உள்பட 6 குடும்பங்களைச் சோ்ந்த 12 பெரியவா்கள், 8 சிறுவா் - சிறுமிகள் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலை பழங்குடியினா் குடியிருப்புக்கு திங்கள்கிழமை வந்தனா். இவா்கள் அப்பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமா்ந்திருந்தனா். அப்போது மரத்தின் பெரிய கிளை ஒன்று ஒடிந்து விழுந்ததில் காட்சன் சாமுவேலின் இளைய மகன் மித்ரன் (13), அனித் ஜெயக்குமாா் என்பவரின் நான்கரை வயது மகள் கிஸ்லின் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும் சிலா் லேசான காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் மித்ரனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். கிஸ்லினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.