பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!
மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வாழ்க்கைப் பயணம் என்பது, மாணவர் தலைவராகத் தொடங்கி, அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டு, லட்சியங்கள், சர்ச்சைகள், அரசியல் சாதனைகளின் பட்டியலுடன் நீள்கிறது.
சத்யபால் மாலிக், நீண்ட காலமாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புது தில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
அவரது இறப்பானது, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கிய அதே நாளில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று, அந்த அதன் ஆறாம் ஆண்டு நினைவுநாளாகும்.
மீரட் கல்லூரியின் மாணவர் அமைப்பின் தலைவராக சத்யபால் மாலிக், தன்னுடைய அரசியல் பயணத்துக்கு பிள்ளையார் சூழி போட்டுத் தொடங்கினார்.
டாக்டர் ராம் மனோகர் லோஹியா மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் பாரதிய லோக் தளத்தில் இணைந்தார். அதன் பொதுச் செயலாளராகவும் ஆனார்.
1984ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். போஃபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, வி.பி. சிங்குடன் இணைந்து ஜன் மோர்ச்சா என்றக் கட்சியைத் தொடங்கினார்.
பிறகு, ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்வானார். வி.பி. சிங் ஆட்சியின்போது, மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.
2004ஆம் ஆண்டு சத்யபால் மாலிக், பாஜகவில் சேர்ந்தார். தேசியத் துணைத் தலைவர் பதவியை வகித்தார். அதன்பிறகுதான், ஜம்மு - காஷ்மீர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் பதவிகளை வகித்தார்.
சர்ச்சைகளை சந்தித்தவர்
பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் சத்யபால் மாலிக். மாநில ஆளுநராக இருந்தபோது, கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். அவ்வாறு ஒரு முறை பேசி, சிபிஐ விசாரணையின் மையப் புள்ளியாகவும் அவர் மாறியிருந்தார். ஒரு மோசமான ஊழல் குறித்து அவர் பேசியதன் மூலம் அந்து வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
கிஷ்த்வார் மாவட்டத்தில் ஹைடெல் திட்டத்தை ஒப்பந்தம் விட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மாலிக் உள்பட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. முதலில் இந்த வழக்கில் மாலிக் ஒரு சாட்சியாகவே விசாரிக்கப்பட்டு வந்தார்.
தான் ஜம்மு - காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, இரண்டு கோப்புகளில் கையெழுத்திட்டால் ரூ.300 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும், ஆனால், ஐந்து ஆடைகளுடன் மட்டுமே தான் இங்கு வந்ததாகவும், அதனுடன் மட்டுமே தான் இங்கிருந்து திரும்புவேன் என்று கூறிவிட்டதாகவும் பேசியிருந்தார். அதன்பிறகு, இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
2018 பேக்ஸ் பிரச்னை
கடந்த 2018ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக இருந்தபோது, சத்யபால் மாலிக், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, அரசு அமைப்பதற்கான உரிமை கோரும் தொலைநகல் செய்தியைப் பெறாததற்கு அரசு விடுமுறை என்று கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்தது.
ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை பேக்ஸ் செய்திருந்தார்.
ஆனால், பேக்ஸ் வந்ததை ஏற்காமல், பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்தார் சத்யபால் மாலிக். அப்போது, 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் இந்த கூட்டணிக் கட்சிகள் 56 உறுப்பினர்களைக் கொண்டிருந்தன.
இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அன்று அரசு விடுமுறை என்பதால், அந்த பேக்ஸ்-ஐ பெற ஊழியர்கள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால், பேக்ஸை தவறவிட்டுவிட்டதாக பதிலளித்திருந்தார் சத்யபால் மாலிக்.