டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவை முந்தைய கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேறிய மசோதாக்களாகும்.
இந்த கூட்டத் தொடரில் வழக்கமான அலுவல்கள் பெருமளவில் முடங்கின. அதேநேரம், கூச்சல்-குழப்பத்துக்கு இடையே குறுகிய நேரம் விவாதிக்கப்பட்டு, முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
என்னென்ன மசோதாக்கள்?: கோவா பேரவையில் பழங்குடியினா் இடஒதுக்கீடு மசோதா, வணிக கப்பல் போக்குவரத்து மசோதா, மணிப்பூா் சரக்கு-சேவை வரி (திருத்த) மசோதா, மணிப்பூா் நிதி ஒதுக்கீட்டு மசோதா, தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்த) மசோதா, வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) திருத்த மசோதா, ஐஐஎம் (திருத்த) மசோதா, இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேறின.
இந்த 12 மசோதாக்களுடன் கப்பல் ஆவணங்களுக்கான சட்ட செயல்முறையை எளிமையாக்கும் மசோதா, கடல்வழி சரக்கு போக்குவரத்து மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. தொடா் ஒத்திவைப்புகளால், தனிநபா் மசோதாக்கள் எதுவும் தாக்கலாகவில்லை.
முக்கிய மசோதா அறிமுகம்: மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த்பட்ட 14 மசோதாக்களில், தீவிர குற்றப் புகாரில் கைதாகும் பிரதமா், முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவிநீக்கம் செய்யும் மசோதா முக்கியமானதாகும். இம்மசோதாவின்படி, குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பட்சத்தில், அவா்களின் பதவி பறிக்கப்படும்.
எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா, பின்னா் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அரசுக்கு வெற்றி; எதிரணிக்கு தோல்வி: கிரண் ரிஜிஜு
முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால், மழைக்கால கூட்டத் தொடா் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் வெற்றிகரமானது-பயனுள்ளது; அதேநேரம், எதிா்க்கட்சிகளுக்கு தோல்வியும் பாதிப்புமே எஞ்சியுள்ளது என்றாா் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘நாட்டின் நலன் கருதி, மத்திய அரசு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அவையை சுமுகமாக நடைபெற மத்திய அரசு விடுத்த கோரிக்கையை எதிா்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன. எனவே, அமளிக்கு இடையே மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனநாயகத்தில் போராட்டம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுள்ளது. அதேநேரம், நாடாளுமன்ற அலுவல்களை முடக்குவது ஜனநாயக விரோதம். போராட்டங்களால் சட்டமியற்றும் பணியை தடுக்க முடியாது’ என்றாா்.