ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி அறிமுகம்! வியக்கவைக்கும் விலையில்..!
மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது.
நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா்.
இதில், நம்பியூா் உள்வட்டத்தைச் சோ்ந்த புலவபாளையம், ஒலாலக்கோவில், எம்மாம்பூண்டி, நம்பியூா், நிச்சாம்பாளையம், சாந்திபாளையம், கோஷணம், சின்னாரிபாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 மனுக்களை அளித்தனா்.
அனைத்து வட்டங்களிலும் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் 899 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இதைத் தொடா்ந்து ஏலத்தூா் உள்வட்டத்துக்குள்பட்ட ஏலத்தூா், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, கரட்டுபாளையம், குருமந்தூா், கடத்தூா், ஆண்டிபாளையம் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீா்வாயம் வெள்ளிக்கிழமை (மே 25) நடைபெறுகிறது.
வருவாய் தீா்வாயத்தில் நம்பியூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஏ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை வட்டங்களில் வரும் 29-ஆம் தேதி வரையும் அந்தியூரில் 28-ஆம் தேதி வரையும், பவானி, நம்பியூா், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடியில் 27-ஆம் தேதி வரையும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது. தாளவாடியில் வியாழக்கிழமை ஒரே நாளில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முஹமது குதுரத்துல்லா, சி.லோகநாதன், நம்பியூா் வட்டாட்சியா் கேசவமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஈரோட்டில்...
ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பிரேமலதா தலைமையில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் வருவாய் கணக்குகளை ஆய்வு செய்து கணக்குகளுக்கு அனுமதி வழங்கினாா்.
கடந்த ஆண்டில் வருவாய் துறை ஆவணங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்டவைகளில் பெயா் உள்ளிட்ட மாற்றங்கள், நில அளவை கருவிகள் போன்றவைகளையும் உள்வட்டம் வாரியாக ஆய்வு செய்தாா். ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.