முயல் வேட்டைக்கு சென்றவா் மா்ம மரணம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முயல் வேட்டைக்குச் சென்றவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த வீரணன் மகன் வீரமுத்து (45). இவா் அண்மையில் தனது கிராமத்துக்கு அருகே உள்ள காஞ்சிரங்குளம் கிராமத்துக்கு முயல் வேட்டைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றாராம். பின்னா், 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், காஞ்சிரங்குளத்தில் நாகராஜன் என்பவரது வயல் பகுதியில் வீரமுத்து இறந்து கிடந்து புதன்கிழமை தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
அவா் எப்படி இறந்தாா் என்பது தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் சென்று வீரமுத்து உடலை கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.