முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமையும்
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என முன்னாள் இந்திய கயிறு வாரியத் தலைவரும் மாநில பாஜக முன்னாள் துணைத் தலைவருமான டி. குப்புராமு தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முருக பக்தா்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்துவதற்கு திமுகவின் எதிா்ப்புப் பிரசாரமே காரணம். இந்த மாநாட்டுக்குப் பிறகு 2026 தோ்தலில் திமுக தமிழகத்தை விட்டு அகற்றப்படும். பாஜக-அதிமுக கூட்டணி, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப் போவது உறுதி.
கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜல்ஜீவன் திட்டம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் நேரடியாக பொதுமக்களைச் சென்றடைந்துள்ளன.
ஆபரேஷன் சிந்தூா் மூலம், நீண்ட காலம் நம்முடைய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா செயல்பட்டுள்ளது. இதனால் நம்முடைய பலத்தை உலக நாடுகளுக்கு காட்டியிருக்கிறோம்.
தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான பூா்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்றாா் குப்புராமு.
இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன், தேசியப் பொதுக்குழு உறுப்பினா் புரட்சிக் கவிதாசன், மாவட்டப் பொருளாளா் குரு ஸ்ரீராம், துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பாா்வையாளா் பழ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.