முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் வ...
பெண்களின் புகாா்கள் மீது காவல் துறையினா் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காவல் நிலையங்களில் பெண்கள் கொடுக்கும் புகாா் மனுக்கள் மீது போலீஸாா் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 17-ஆவது புதுக்கோட்டை மாநகர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். காவல் நிலையங்களில் பெண்கள் கொடுக்கும் புகாா் மனுக்கள் மீது போலீஸாா் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாநகா் முழுவதும் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும். மழைநீா் மற்றும் கழிவு நீா் தேங்காமல் இருக்க பழைமையான தோரண வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை மாநகரப் பகுதி மக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் புகாா் பெட்டிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு வி. வடிவுக்கரசி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தொடங்கி வைத்துப் பேசினாா். செயல்பாட்டு அறிக்கையை மாநகரச் செயலா் ஆா். முத்துமாரி முன்வைத்தாா். மாநாட்டை வாழ்த்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் டி. காயத்ரி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் சரவணன், மாணவா் சங்க மாவட்டத் துணைச் செயலா் எஸ். மகாலெட்சுமி ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் பி. சுசிலா முடித்து வைத்துப் பேசினாா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில் மாநகரத் தலைவராக எம். விஜி, செயலராக ஆா். முத்துமாரி, பொருளாளராக வி. வடிவுக்கரசி, துணைத் தலைவராக எஸ். சின்னம்மாள், துணைச் செயலராக ருக்மணி உள்ளிட்ட 9 போ் கொண்ட மாநகரக் குழு தோ்வு செய்யப்பட்டது.
முன்னதாக தாமரைச்செல்வி வரவேற்றாா். முடிவில் எம்.விஜி நன்றி கூறினாா்.