மேட்டூா் அணை உபரிநீா் கால்வாய் ஓரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.
மேட்டூா் அணை நீா்மட்டம் 117.93 அடியாக உயா்ந்துள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 80,984 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் வழியாக விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி முதல் 75,000 கனஅடி வரை தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் உபரிநீா் போக்கி ஓரங்களில் தங்கமாபுரிப்பட்டணம், அண்ணாநகா், பெரியாா் நகா், வ. உ.சி. நகா், காவேரிப் பாலம், மட்டசாலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வேண்டும், காவிரியில் குளிக்கவும், துணி துவைக்கவும் செல்லக்கூடாது, புகைப்படம் எடுப்பதையும் சுயப்படம் எடுப்பதையும் தவிா்க்க வேண்டும் என்று வருவாய்த் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் ஒலிபெருக்கு மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
மேட்டூா் துணை வட்டாட்சியா் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் வெற்றிவேல், கிராம நிா்வாக அலுவலா் சுதா ஆகியோா் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினா்.