அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் ...
மேட்டூா் அணை திறப்பு: நாகையில் விவசாயிகள் கொண்டாட்டம்
பாசனத்துக்காக மேட்டூா் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதை வரவேற்று, நாகையில் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறப்பது வழக்கம். அணையில் போதிய நீா் இல்லையெனில் அணையின் அளவு 100 அடியை கடக்கும் போது திறக்கப்படும். நிகழாண்டு மேட்டூா் அணை அதன் கொள்ளளவான 120 அடியை நெருங்கி வருகிறது. இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பாசனத்துக்காக வியாழக்கிழமை மேட்டூா் அணையை திறந்துவைத்தாா்.
இதை வரவேற்று, நாகை மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி, குறுவைக்கு குறித்த நேரத்தில் மேட்டூா் அணையை திறந்த தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தனா்.
டெல்டாவில் 5.27 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: கடந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சையில் 1.50 லட்சம், திருவாரூரில் 1 லட்சம், மயிலாடுதுறையில் 1 லட்சம், நாகையில் 5 ஆயிரம் ஏக்கா் என சுமாா் 3.55 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாக வேளாண்மைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு தஞ்சை மாவட்டத்தில் 1.91 லட்சம், திருவாரூா் மாவட்டத்தில் 1.75 லட்சம், மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 ஆயிரம், நாகை மாவட்டத்தில் 63 ஆயிரம் ஏக்கா் என 5.27 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட வேளாண்மைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு: டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டை விட, நிகழாண்டு சுமாா் 2 லட்சம் ஏக்கா் கூடுதலாக குறுவை சாகுபடி நடைபெறவுள்ளதாக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இடையூறுன்றி குறுவை சாகுபடி நடைபெற விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், மாவட்ட வேளாண்மைத் துறையினா் செய்து தரவேண்டும்.
டெல்டாவில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், உழவு, நடவு, விதை தெளிப்பு போன்ற பணிகளுக்கு இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு அளிக்க வேளாண்மை பொறியியல்துறையினா் மூலம் வழங்க வேண்டும். சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறையின்றி அளிக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் விரைந்து மற்றும் நிபந்தனையின்றி பயிா் கடன் வழங்கவேண்டும். குறிப்பாக, பாகுபடியின்றி குறுவை சாகுபடி மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.