தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினரிடையே பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, சிறுபான்மையின மக்களையும் அவர்களின் சொத்துகளையும் பாதுகாப்போம் என்று உறுதியளித்துள்ளார்.
"வக்ஃப் சட்டத் திருத்தத்தினால் நீங்கள் வருத்தப்பட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள், மேற்குவங்கத்தில் பிரித்தாளும் ஆட்சி இருக்காது. அனைவரும் ஒன்றாக இருப்போம். அரசியலுக்காக மக்களைத் தூண்டுபவர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்த மசோதா தொடர்பாக வன்முறை நடைபெற்றது வருத்தமளிக்கிறது. வங்கதேச எல்லைப்பகுதி இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடாது. மேற்கு வங்கத்தில் 33 சதவீத சிறுபான்மையினர் உள்ளனர்.
வங்கதேசம், பாகிஸ்தான், மேற்குவங்கம் மற்றும் இந்தியா அனைத்தும் ஒன்றாகத்தான் இருந்தன. பின்னர்தான் பிரிவினை நடந்தது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய வேலை. மக்கள் ஒன்றாக இருந்தால், உலகையே வெல்ல முடியும்.
உங்களையும் உங்கள் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றாலும் இந்த ஒற்றுமையிலிருந்து என்னைப் பிரிக்க முடியாது. அனைத்து மத, சாதியைச் சேர்ந்தவர்களும் மனித குலத்திற்காக பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். நான் அனைத்து மத இடங்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறேன்" என்றார்.
வக்ஃப் திருத்த மசோதா
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் போராட்டம்! போலீசார் தடியடி எனக் குற்றச்சாட்டு!