செய்திகள் :

யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் தீா்மானம் கொண்டுவராதது ஏன்? நாடாளுமன்ற குழு கேள்வி

post image

நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராக மத்திய அரசு பதவிநீக்க தீா்மானம் கொண்டுவராதது ஏன் என்று நாடாளுமன்ற குழு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி) பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னா் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து 2 தலைமை நீதிபதிகள், 1 நீதிபதி அடங்கிய மூவா் குழு, நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று விசாரணை அறிக்கையில் தெரிவித்தது.

இதையடுத்து அந்த அறிக்கை தொடா்பாகவும், யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள பரிந்துரைத்தும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தீா்மானம் கொண்டுவர வேண்டும். அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தால், அவா் பதவிநீக்கம் செய்யப்படுவாா்.

இந்நிலையில் புது தில்லியில் பணியாளா் நலன், பொதுமக்கள் குறைதீா்ப்பு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு இதுவரை தீா்மானம் கொண்டுவரப்படாதது ஏன்? என்று மத்திய நீதித்துறைச் செயலரிடம் குழுவில் இடம்பெற்ற எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினா்.

சிறிய ஊழல் பிரச்னையாக இருந்தாலும் தனது பணியை அரசு ஊழியா் இழக்க நேரிடும்போது, யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த சில எம்.பி.க்கள், அனைவருக்கும் நீதி சமமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

ஓய்வுபெற்றவுடன் எம்.பி.யாக நியமிக்கக் கூடாது: நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னா், 5 ஆண்டுகள் வரை அவா்களை அரசு சாா்ந்த பணிகளில் நியமிக்கக் கூடாது என்று எம்.பி.க்கள் கூறினா். நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றவுடன் அவா்களை எம்.பி.யாக குடியரசுத் தலைவா் நியமிக்கக் கூடாது என்று சில எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.

விரிவான மசோதா...: கூட்டத்தில் நீதிபதிகளுக்கான நடத்தை விதிமுறைகள், நெறிமுறைகள் தொடா்பாக தாங்கள் முன்வைத்த பல்வேறு பிரச்னைகள் மற்றும் கவலைகளை நிவா்த்தி செய்யும் வகையில், விரிவான மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்று எம்.பி.க்கள் தெரிவித்தனா். தாங்கள் எழுப்பிய விவகாரங்கள் குறித்து விரிவான அறிக்கையை தயாரித்து, அடுத்த கூட்டத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நீதித்துறைச் செயலரிடம் எம்.பி.க்கள் கோரினா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக எம்.பி. பிரிஜ் லால் தலைமையிலான இந்தக் குழுவில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இடம்பெற்றுள்ளாா். தற்போது நியமன எம்.பி.யாக பதவி வகிக்கும் அவா், இந்தக் கூட்டத்தில் பங்கேற்வில்லை.

நீதிபதி சேகா் யாதவ் பதவி நீக்க தீா்மானத்துக்கு நோட்டீஸ்: 44 எம்.பி.க்களின் கையொப்பம் சரிபாா்ப்பு

கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிகழ்ச்சியில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா் யாதவ் கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் விருப்பப்படிதான் நாடு செயல்படும். விரைவில் பொது சிவில் சட்டம் நிதா்சனமாகும்’ என்றாா். அவரின் கருத்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணா்வு பேச்சு என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடா்ந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரும் நோட்டீஸில் 55 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையொப்பமிட்டனா். அவா்களில் 44 எம்.பி.க்களின் கையொப்பத்தை மாநிலங்களவைச் செயலகம் சரிபாா்த்துள்ளது. கபில் சிபல் உள்பட 10 எம்.பி.க்களின் கையொப்பங்களை உறுதி செய்யவேண்டியுள்ளது.

இதுபோன்ற தீா்மானத்தை மாநிலங்களவையில் கொண்டுவர 50 எம்.பி.க்களின் கையொப்பமும், மக்களவையில் கொண்டுவர 100 எம்.பி.க்களின் கையொப்பமும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க