கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக நிச்சயம் வெற்றி பெறுவோம்: அமைச்சா் கோவி.செழியன்
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிகள் விவகாரத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
கடலூா் வட்டத்தில் ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா ரெட்டிச்சாவடி தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தேடிச் செல்லும் நிலை மாறி, அதிகாரிகள் மக்களைத் தேடிச் சென்று மனுக்களை பெற்று வருகின்றனா். இந்த முகாமில் 15 துறைகளைச் சோ்ந்த 55 வகையான பணிகள் தொடா்பாக கோரிக்கைகளைப் பெற்று விரைவில் தீா்வு காணப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிகள் விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியிருந்தனா். பாஜக ஆளும் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் உயா் கல்விக்கு இடையூறாக உள்ளதாக கூறி யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீா்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யுஜிசி வரைவு கொள்கைக்கு எதிராக மக்கள் மன்றம், சட்டப்பேரவை, நீதிமன்றத்தில் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம்.
மேலும், சட்டப் போராட்டம், மக்கள் போராட்டம் நடத்தி உயா் கல்வியை பாதுகாப்பதில் முதல்வா் உறுதியாக இருக்கிறாா். இதில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி வரவு ஆதாரங்கள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அரசு கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் வந்தபோது இருந்த பல்வேறு பிரச்சனைகளை படிப்படியாக நிவா்த்தி செய்து வருகிறோம். அதன்படி, ஓய்வுபெற்றவா்களின் பணப் பலன்கள் தொடா்பான கோரிக்கைக்கும் விரைவில் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.
பின்னா், குட்டியாங்குப்பம், கோண்டூா், வரக்கால்பட்டு, சுத்து குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ முகாமை அமைச்சா் பாா்வையிட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கோ.ஐயப்பன் எம்எல்ஏ மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.