ரூ.18.41 கோடியில் மாநகராட்சி மாதிரிப் பள்ளி திறப்பு
திருச்சி மாநகராட்சியின் 57ஆவது வாா்டுக்குள்பட்ட எடமலைப்பட்டிபுதூா் ராஜீவ்காந்தி நகரில் ரூ. 18.41 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மாதிரிப் பள்ளியை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெரம்பலூா் எம்பி அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை திறந்துவைத்துப் பேசினா்.
2.91 ஏக்கரில் மாநகராட்சியின் கல்வி நிதி ரூ.9.90 கோடியில் தரைத்தளம், ரூ. 8.51 கோடியில் முதல் தளம் என மொத்தம் ரூ.18.41 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு தளங்ளிலும் தலா 16 வகுப்பறைகள் வீதம் 32 வகுப்பறைகள் அமைந்துள்ளன. 2 நிா்வாக அறை, ஆசிரியா்களுக்கான 4 அறைகள், 4 ஆய்வகங்கள், 4 கழிப்பறைகள், விழா மேடை, சுற்றுச் சுவா், மாணவ, மாணவிகளுக்கான இருக்கைகள், மேஜைகள், ஆசிரியா்களுக்கான இருக்கைகள், நிா்வாக அறைகளுக்கான இருக்கைகள், மேஜைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் என அனைத்து வசதிகளுடன் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானம், நூலகம், ஸ்மாா்ட் வகுப்பறைகளும் உள்ளன.
விழா மேடையின் முன்புறம் திறந்தவெளி கூட்ட அரங்கமும் உள்ளது. பள்ளியின் வடிவமைப்பு பரந்த தாழ்வாரங்கள், படிக்கட்டுகள், இயற்கை விளக்குகள் மற்றும் நல்ல காற்றோட்டம் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப் பிரியா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பிராட்டியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளையும் அமைச்சா்கள் திறந்து வைத்தனா். மாணவா்களுக்கு அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.