ரூ.52 லட்சம் கையாடல்: ரயில்வேக்கு உணவு தயாரிக்கும் நிறுவன மேலாளா் மீது வழக்கு
கோவையில் ரயில்வே கேண்டீனுக்கு உணவு தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் ரூ. 52 லட்சம் கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கோவையில் உள்ள ரயில்வே கேண்டீனுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனம் உக்கடம், பெரியகடை வீதியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளராக தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த நாகராஜ் (48) பணியாற்றி வருகிறாா். இந்நிறுவனத்தின் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
இந்நிலையில் தலைமையக நிறுவன மேலாளா் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு கடந்த மாதம் வந்து இங்குள்ள உணவு நிறுவனத்தில் தணிக்கை செய்தனா். இதில் கடந்த மே 15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உணவு விநியோகம் செய்த வகையில் கிடைத்த ரூ. 63 லட்சத்தில், ரூ.11 லட்சத்தை மட்டும் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்திய நாகராஜ், ரூ.52 லட்சத்தைக் கையாடல் செய்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் நாகராஜ் மீது உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.