ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி
ஊரகப் பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை அமைச்சர் இ. பெரியசாமி வெளியிட்டார்.
அதில் முக்கியமாக, ஊரகப்பகுதிகளில், மக்கள் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை எளிதில் பெறும் பொருட்டு, 500 முழுநேர நியாய விலைக்கடைகள் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவ்வூராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திட ஏதுவாக, தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ. 10 கோடி மானியமாக வழங்கப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பள்ளிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், நூலகக் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு அலுவலக மற்றும் பொது பயன்பாட்டுக் கட்டடங்களை புனரமைத்து முறையாகப் பராமரிப்பதற்காக, விரிவான பராமரிப்புக் கொள்கை (Building Maintenance Policy) வகுக்கப்படும்.
2025-26 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதற்கென மாநில மானியத்திலிருந்து ரூ. 100 கோடி நிதிக்குழு ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார்.
இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!