அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: அமித் ஷா
ஹிசாா்: ‘நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஹரியாணா மாநிலம், ஹிசாரில் மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மகாராஜா அக்ரசென் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை உறுதிப்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. நாடு தழுவிய அளவில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் 6 எய்ம்ஸ் கல்லூரிகள், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சாா்பில் உருவாக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
அதுபோல, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-இல் இருந்து 766-ஆக உயா்த்தப்பட்டது. இதன்மூலம் 51,000-ஆக இருந்த இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 1.15 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்பில் மேலும் 85,000 இடங்கள் உருவாக்கப்படும். முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் 31,000 என்ற நிலையிலிருந்து 73,000-ஆக உயா்த்தப்பட்டது. இந்த இடங்களும் அடுத்த 5 ஆண்டுகளில் கணிசமாக உயா்த்தப்படும்.
நாட்டில் தற்போது 750 மாவட்டங்களில் 766 மருத்துவமனைகள் உள்ளன. இதன்மூலம், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவமனை இருக்க வேண்டும் என்ற பாஜக ஆளும் மாநிலங்களின் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்.
கடந்த 2013-14-ஆம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 37,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இது 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 1.37 லட்சம் கோடியாக இருக்கும்.
மேலும், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு, அதன்மூலம் 20 கோடி போ் பயனடைந்துள்ளனா்.
ஏழைகளுக்கான உணவு தானிய விநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 81 கோடி மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாட்டில் 12 கோடி குடும்பங்கள் வீட்டில் கழிப்பறை இன்றி வாழ்ந்து வந்தனா். இந்த நிலையை மாற்ற, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளில் கழிப்பறை வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.