தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?
``ரூ12,500 சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?'' - குமுறும் பகுதிநேர ஆசிரியர்கள்
"காலமுறை சம்பளம் வழங்க முதல்வர் ஏற்பாடு செய்வார் என நம்பினோம், ஆனால் பணி நிரந்தரம் செய்யாமல் காலத்தை கடத்தி விட்டார்." என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வேன் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஆனால் முதல்வராகி 50 மாதம் ஆகும் நிலையில் பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து வருவது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
15-வது கல்வி ஆண்டிலும் எங்களை தொகுப்பூதியத்திலே வைத்து இருப்பதால் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இன்றைய விலைவாசி உயர்வில் தற்போதைய 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியுமா என்பதை முதல்வர் ஒரு நிமிடம் நினைத்து பார்க்க வேண்டும்.
பல ஆண்டுகளாக வழங்கப்படாத மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி போன்றவற்றை முடிவுக்கு கொண்டு வந்து காலமுறை சம்பளம் வழங்க முதல்வர் ஏற்பாடு செய்வார் என நம்பினோம். ஆனால் பணி நிரந்தரம் செய்யாமல் காலத்தை கடத்தி விட்டார்.
திமுகவின் ஆட்சியில் இனி எஞ்சி இருக்கின்ற 10 மாதத்தில் அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வரும் முன்பே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட முதல்வர் ஸ்டாலின்தான் வழி காட்ட வேண்டும்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்னதை செயல்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், விதவைகளும் பெண்கள் மற்றும் ஏழை விளிம்பு நிலை மக்கள் தான் இந்த வேலையில் , 59 சதவிகிதத்துக்கும் மேலாக உள்ளார்கள். பலர் 50 வயதை கடந்து விட்டார்கள். இனி எஞ்சிய காலத்திலாவது நல்லபடியாக வாழ காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்