பூஜையுடன் தொடங்கியது கில்லர் படப்பிடிப்பு! திரைப் பிரபலங்கள் பங்கேற்பு!
ரேஷன் பணியாளா்கள் ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டம்! கு.பாலசுப்ரமணியன்
ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஜூலை 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக, அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
கடலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு சரியான அளவு பொருள்கள் வழங்க விற்பனை முனைய கருவியுடன் ப்ளூடூத் இணைக்கும் முடிவை வரவேற்கிறோம்.
பொருள்கள் வழங்கும்போது, விரல் ரேகை பதிவு 90 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், இது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. எனவே, 40 சதவீத விரல் ரேகை பொருத்தம் இருந்தாலே பொருள்களை வழங்கலாம் என்று மாற்றம் கொண்டுவர வேண்டும்.
நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்களை கொண்டு வரும்போது நியாயவிலைக் கடைகளிலேயே அங்குள்ள விற்பனை முனைய கருவியோடு ப்ளூடூத்தை இணைத்து பொருள்களை சரியான எடையில் கடைகளுக்கு வழங்க வேண்டும். மக்களுக்கு விரைவில் பொருள்கள் கிடைக்க எல்லா கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்ய வேண்டும்.
8-ஆவது ஊதியக் குழுவில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் ஊதிய மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 7-ஆம் தேதி மாநில அளவில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஒரு நாள் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு தலையிட்டு, சங்க நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றாா்.
மாநிலப் பொருளாளா் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் ஜே.இருதயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.