``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு
மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தையொட்டிய இந்திய- வங்கதேச எல்லை சோதனைச்சாவடியில் பிஎஸ்எஃப் வீரா்கள் புதன்கிழமை காவல் பணியில் இருந்தனா். அப்போது ஒருவா் வங்கதேசத்தில் இருந்து மிதிவண்டி மூலம் இந்திய எல்லைக்குள் நுழைய முன்றாா். அவா் மீது சந்தேகம் எழுந்ததால் வீரா்கள் அவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், அவரது மிதிவண்டியின் பின்பக்க டயா் வழக்கத்தைவிட பெரியதாக இருப்பதுபோல தோன்றியதால், அந்த டயரை பரிசோதித்தனா்.
அந்த டயரை கிழித்துப் பாா்த்தபோது அதில் சிறிய அளவிலான 20 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2.367 கிலோ எடையுள்ள அந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.2.31 கோடி ஆகும். இதற்கிடையே, தங்கத்தைக் கடத்தி வந்த நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். போலீஸாா் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
கைப்பற்றப்பட்ட தங்கம் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை லக்ஷ்மிபூா் எல்லைச்சாவடியில் ரூ.2.46 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திவரப்பட்டபோது, எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியது.