குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
வாகன சோதனை: பைக்கில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி!
கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நிலையில், போக்குவரத்து காவலர் வாகனத்தை நிறுத்தச் சொல்லியதால் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை லாரி மோதியதில் பலியானார்.
இந்த விபத்துக்கு போக்குவரத்து காவலர்தான் காரணம் என்று கூறி ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 3 துணை உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மத்தூர் தாலுகாவில் உள்ள கோரவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த வானிஸ்ரீ - அசோக் தம்பதியினரின் ஒரே மகள் ஹிருத்திக்ஷா. நேற்று முன்நாள் ஹிருத்திக்ஷா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. சிறுமியை வானிஸ்ரீ மற்றும் அவரது மைத்துனர் பாஸ்கர் கெளடா ஆகியோர் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமிக்கு முதலுதவி அளித்தனர்.
மேலும், மத்தூரில் சிறுமிக்கு செலுத்த வேண்டிய ரேபிஸ் தடுப்பூசி இல்லாததால் மண்டியாவில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில், இன்று(மே 27) காலை 10.30 மணியளவில் மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் பாஸ்கர் கெளடா தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஹிருத்திக்ஷா, அவரது தாயார் மற்றும் அவரது மாமாவை போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். மருத்துவக் காரணத்தை வானிஸ்ரீ கூறிய பிறகு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மீண்டும் அவர்களை சில மீட்டர்களில் மற்றொரு போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்திய நிலையில், குழப்பத்தில் பாஸ்கர் கெளடா வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, வண்டியின் இடதுபுறம் விழுந்தார், வாணிஸ்ரீ, ஹிருத்திக்ஷா வலது புறத்தில் விழ எதிரே வந்த லாரி மோதியது.
லாரி மோதியதில் சிறுமிகு தலையில் பலந்த காயம் ஏற்பட்டு சிறுமி பலியானார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த ஹிருத்திக்ஷாவின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் சிறுமியின் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலர் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மண்டியா காவல் துறை கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன பாலதண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றார். தொடர்ந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ஜெயராம், நாகராஜ், குருதேவ் ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: 73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?