தமுஎகச 2024-ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருத...
வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைப்பு: ஆட்சேபனை இருப்பின் 7 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்!
அரியலூா் மாவட்டத்திலுள்ள 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடி மையங்கள் மறு சீரமைக்கப்படுவதால் ஆட்சேபனை இருப்பின் 7 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட ஊரக மற்றும் நகா் பகுதிகளில் ஏற்கெனவே 596 வாக்குசாவடி மையங்கள் உள்ளன.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகள் மற்றும் 2.கி.மீ தொலைவுக்கு மேல் அமைந்துள்ள வாக்கு சாவடிகள் புதிதாகவும், பாகத்தில் உள்ள பரப்புகளை மாற்றி மறுசீரமைப்பு செய்தல், மற்றும் கட்டட மாற்றம், அமைவிட மாற்றம் கீழ் வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைக்கப்படுவதால் அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 596 இல் இருந்து 650 ஆக உருவாகின்றது.
இந்த பட்டியலில் மீது ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை இருப்பின் 7 நாள்களுக்குள் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியா்கள் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலரிடம் எழுத்துபூா்வமாக அளிக்கலாம்.
மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தினால் சிறப்பு தீவிர திருத்தம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் இப்பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் அவசியம். எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் வாக்குசாவடி நிலை முகவா்களை நியமனம் செய்து (பிஎல்ஏ-1, புதிய படிவம் பிஎல்ஏ-2)உரிய படிவத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
முன்னதாக அவா், ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு செய்தாா்.
இக்கூட்டத்தில் அரியலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், கோட்டாட்சியா்கள், தோ்தல் தனி வட்டாட்சியா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.