விதிமீறல்: பூச்சிமருந்து விற்பனை செய்ய 36 உரக் கடைகளுக்கு தடை
திருவாரூா் மாவட்டத்தில், பூச்சி மருந்து விற்பனை செய்வதில் உரிய தரச் சான்று பெறாமல் விதிமீறலில் ஈடுபட்ட 36 உரக் கடைகளுக்கு பூச்சி மருந்து விற்பனை செய்ய 15 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி நடைபெற்றுவரும் நிலையில், குறுவை நேரடி நெல் விதை தெளிப்பு செய்த வயல்களில் பயன்பாட்டுக்காக பூச்சி மருந்துகளை விவசாயிகள் வாங்கிக் செல்கின்றனா்.
இந்நிலையில், சில உரக்கடைகளில் தரம் குறைந்த பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் தனியாா் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனைக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், பதிவேடுகளை சரியாக பராமரிக்காமல் இருந்தது, தரச் சான்று பெறாமல் பூச்சி மருந்துகளை விற்பனை செய்தது, காலாவதியான பூச்சி மருந்துகளை விற்பனை செய்தது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
இதைத்தொடா்ந்து, திருவாரூா், முத்துப்பேட்டை, மன்னாா்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பூச்சி மருந்து விற்பனை செய்த 36 தனியாா் உரக் கடைகளுக்கு 15 நாள்கள் பூச்சி மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.